மத்திய அரசின் 2012-13ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை... ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்?
இது அப்பாவி மக்களின் மீது தொடுக்கப்பட்ட பொருளாதார தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எரிபொருளுக்கான மானியம் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெட்டப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை பங்குகளின் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும் மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது. எரிபொருள் மானியம் நேரிடையாக மக்களுக்குச் சேர்க்கும் திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் என்பதே உண்மை. பொதுத்துறை பங்குகளை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும் அபாயம் இருப்பதையும் மறுக்க முடியவில்லை. கறுப்புப் பணம் கட்டுப்படுத்தப்படுவது குறித்து எந்த திட்டமோ வரிவிதிப்போ இல்லை. முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எவ்வித வரிவிதிப்பும் இல்லை. திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல் வழங்கக்கூடியது. பணவீக்கத்தின் வேகம் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் பெருகுமோ என அஞ்சும் நிலையில் வருமானவரி உச்சவரம்பு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் தான் என்பது போதுமானதல்ல. மேலும் விலைவாசிகளைக் குறைப்பதற்கோ மேலும் ஏறாமல் தடுப்பதற்கோ எவ்வித முன்னேற்பாடுகளையும் இந்த பட்ஜெட்டில் காண முடியவில்லை.
சிறுபான்மை சமூக மேம்பாட்டுக்கு எவ்வித திட்டங்களும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை, மகளிரை கைதூக்கி விடும் திட்டங்களும் இதில் காண முடியவில்லை. ஈழத் தமிழர் மறுவாழ்வு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் மேல்தட்டு மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கையாகவே இது கருதப்படுகிறது

No comments:
Post a Comment