Tuesday, June 5, 2012

தேவை தேர்தல் சீர்திருத்தம்

E-mail Print PDF
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற ராஜ்யசபாவுக்கு இரண்டு இடம் காலியாக இருந்தது. அந்த மாநிலத்தில் இரண்டு ராஜ்யசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு இடங்களுக்கு ஐந்து பேர் போட்டியிட்டனர். இதனால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருவர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையில், போட்டியிட்ட வேட்பாளர்களிடையே வாக்காளர்களான சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் போட்டி மும்முரமாக நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காக ஒரு சுயேச்சை வேட்பாளரின் தம்பி தனது காரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாயைக் கொண்டு சென்றபோது காவல்துறையினர் மற்றும் வருமானவரித் துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் நடைபெறவிருந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. உறுதியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஷஃபி குரைஷி தெரிவித்திருக்கிறார். தேர்தலை ரத்து செய்த கையோடு குரைஷி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறிய வார்த்தைகள் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், ஊழலில் புரளும் கட்சிகளுக்கும், பணத்தைக் கொண்டு அரசுகளை வளைக்கலாம் என நினைக்கும் அதிகாரத் தரகர்களுக்கும் சாட்டையடி கொடுக்கும் விதத்தில் அமைந்தது.
பணபலத்தைக் காட்டி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இது சரியான பாடம் என குரைஷி தெரிவித்தார். மேலும் எங்களின் நடவடிக்கை இனிமேல் பணபலத்தை வைத்து தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகளுக்கு சரியான பாடமாக மட்டும் அமையாமல் அச்சத்தையும் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் குரைஷி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஜனநாயகத்தை வீழ்த்த பணநாயகம் செய்யும் முயற்சிகள் பலிக்கவில்லை என்றே சொல்லலாம். சில மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தேர்தல்களில் பணம் விளையாடி இருக்கலாமே தவிர நாடு முழுமையும் நேர்மையான முறையில் யாருக்கும் அஞ்சாத முறையில் தேர்தல்களை நடத்திக் காட்டியவர் குரைஷி. இத்தனை சாதனைகளை நிகழ்த்தி இருப்பினும் இனிமேல் இதுபோன்று நிகழாமல் இருக்க அரசியல் கட்சிகள்தான் ஒன்றுசேர்ந்து முடிவு எடுக்கவேண்டும் என்றும் அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.
இப்போதுதான் தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது மிகவும் அவசியம் ஆகிறது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தத்தை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் நடைமுறைக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று கூறிய குரைஷி, மேலும் பல தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றும், குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கவும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்கள் ஒளிவுமறைவு அற்ற நிலையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனக்கூறும் குரைஷி, தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டுமென சூளுரைத்துள்ளார்.
குரைஷி நிச்சயம் சாதிப்பார் என நம்புவோம். முறைகேடான தேர்தல் முறைகளைக் களைந்து தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு உத்வேகத்துடன் செயல்படும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இந்திய மக்கள் அனைவரும் தோள் கொடுப்பார்கள் என்பது உறுதி

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை

E-mail Print PDF
அறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களின் வாயிலாக நலப் பணிகளும், அறப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன என்றுதான் நாம் அனைவரும் நம்பி வந்தோம். ஆனால் நல்லவர்கள் நல்ல நோக்கத்திற்காக சமர்ப்பித்த சொத்துக்களைக்கூட ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

இது இந்தியா முழுவதும் உள்ள நிலையாகும். இடையே அத்தி பூத்தாற்போல ஆற்றல்மிக்க செயல்வீரர்கள் வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சில மோசடிகளை அம்பலப்படுத்தி வக்ஃபு சொத்துக்களை மீட்கும் சம்பவமும் நடைபெறுகிறது. ஆயினும் சுரண்டும் கும்பல் தொடர்ந்து தங்களது மோசடிகளை அரங்கேறச் செய்வது இந்தியா முழுவதும் வாடிக்கையாகி வருகிறது. நமது அண்டை மாநிலமான பாஜக ஆளும் கர்நாடகாவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு வக்ஃபு வாரியத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வக்ஃபு ஊழல் விவகாரம் பற்றி உள்ளே நுழையும் முன்பு பொதுவாக வக்ஃபு வாரியம் பற்றி சில பிரமிப்பூட்டும் தகவல்களைப் பார்க்கலாம். பரந்த இந்தியாவில் அதிக அளவு நிலங்களை சொந்தம் கொண்டதாக, திரண்ட சொத்துக்களைக் கொண்ட செல்வ வளம் பொருந்தியதாக இந்திய ரயில்வேத் துறை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏராளமான நிலங்களை தன்னகத்தே கொண்ட கொழுந்த பணக்காரத் துறையாக இந்திய ராணுவத் துறை விளங்குகிறது.
இவ்விரண்டு மெகா துறைகளுக்கும் அடுத்தபடியாக ஏராளமான பரப்பளவு கொண்டதாக நம் முன்னோர்களின் முஸ்லிம் கொடை வள்ளல்களின் நன்கொடையாம் வக்ஃபு வாரியம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புமிக்க பின்னணி கொண்ட வக்ஃபு வாரிய சொத்துக்களில் கர்நாடக மாநிலத்தில் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை விடவும், முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்படும் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் போல கர்நாடக வக்ஃபு வாரிய ஊழலும் வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம்பெறப் போகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முன்னாள் இஸ்ரோ உயர் அதிகாரிகளின் ஊழல் போன்றவை அகில இந்திய அளவில் பிரம்மாண்ட ஊழல்களாகவும், கடந்த வாரம் வெளியான 10 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி வயல் ஒப்பந்த ஏல ஊழல் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊழலில் முதலிடம் பெற்றாலும், இரண்டு லட்சம் கோடி வக்ஃபு வாரிய ஊழல் ஒரு மாநில அளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன? இவை அத்தனையிலும் உள்ள முறைகேடுகள் வெளிவந்தால் நினைக்கும் போதே மயக்கம் வருகிறது அல்லவா? இரண்டு லட்சம் கோடி வக்ஃபு நில ஊழல் குறித்து மாநில சிறுபான்மை ஆணையம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டு மென கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தபோது, இதற்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் சதானந்த கவுடா, இந்தப் பிரச்சனை குறித்து தமது அரசு முழுமையாக ஆய்வு செய்தபின் அதனை சபையில் விவாதத்திற்கு வைத்து அதன்பிறகு அறிக்கை வெளியிடலாம் என்று கூறிய அவர், யார் யார் வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமித்தார்களோ அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ முறையில் திரும்பப் பெறப்படும். வக்ஃபு நிலங்களைச் சுரண்டியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.
கர்நாடக வக்ஃபு ஊழலின் மதிப்பு இரண்டு மாநில பட்ஜெட்டுக்கு சமமான நிதிநிலை அளவைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் சுருட்டப்பட்ட உண்மையான பண மதிப்பு உலகத்திற்கு தெரிய வேண்டுமானால் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால் மட்டுமே அரசியல் தலையீடு இன்றி உண்மைகள் வெளிவரும் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சமீர் அஹ்மதுகான் கூறினார்.
ஊழல் பற்றிய சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கிய உடன் கர்நாடக மாநில சிறுபான்மை ஆணைய சேர்மன் அன்வர் மனிப்பாடி தலைமையில் ஒரு குழுவை கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அமைத்தார். அந்தக்குழு தனது 7000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சதானந்த கவுடா முன்னிலையில் சமர்ப்பித்தது. இந்தக்குழு 1954ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃபு நில பேர ஊழல் குறித்து விசாரணை செய்தது. 1954ல் இருந்து வக்ஃபு முறைகேடுகளை விசாரித்தால் பெரும்பாலான காங்கிரஸ் திமிங்கிலங்கள் இதில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கர்நாடக வக்ஃபு ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் பெரும் தலைகள் கோரிக்கை வைத்துள்ளன.
கர்நாடக மாநிலத்தை இதுவரை சுரண்டிய ஸாரி, ஆண்ட கட்சிகளில் காங்கிரஸை அடுத்து தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த புண்ணியவான்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். சிபிஐ காங்கிரஸின் கதர்சட்டை அணிந்து சோனியா காந்திக்கு ஜே என கோஷம் போட்டு செயல்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் வெளிவந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் கோரிக்கையின்படி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தால் நீதி நிலைநாட்டப்படும் என ஓரளவு நாம் நம்பலாம்.
45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கறைபடியா(?) கரத்துக்குச் சொந்தக்காரரான திருவாளர் எடியூரப்பாவை வீட்டிற்கும், சிறைக்கும் அனுப்பிய சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் உண்மை வெளியாகும் என உறுதிபட கருத்துக்கள் பரவத் தொடங்கியுள்ள நிலையில் கர்நாடக பாஜக அரசு அமைத்துள்ள மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கையினை நாம் பார்த்தோமேயானால் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கர்நாடக வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானவை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் 22 ஆயிரம் ஏக்கரில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் அன்வர் மனிப்பாடி கமிட்டி கூறுகிறது. அதிலும் குறிப்பாக சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலங்களில் நிதி மதிப்பில் 85 சதவீதம் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநகரமான பெங்களூருவில் நில ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளதாம்.
கர்நாடக வக்ஃபு வாரியத்தின¢ நிலங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் மிக அதிக அளவு முறைகேடுகள் 2001ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏராளமான வக்ஃபு நிலங்கள் இந்த காலக்கட்டங்களில் சந்தடியின்றி தனியார்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. முறையான விசாரணை செய்து நடவடிக்கைகளை கடுமையாக்கினால் அனைத்தும் வெளிவரும் என அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கை கூறுகிறது. ஏராளமான அரசியல்வாதிகளும், இடைத்தர கர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அன்வர் கூறுகிறார். மெகா ஊழலில் 38 பேர் குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட மறுத்துவிட்ட அன்வர் மனிப்பாடி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 38 பேர் இந்த மெகா ஊழலில் தொடர்புடையவர்கள் என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், வக்ஃபு வாரிய முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளதாக அன்வர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியே கசிந்து பழம்பெருச்சாளி அரசியல் வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி 38 முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் பெய்க், என்.ஏ.ஹாரிஸ், தன்வீர் சேத், கமருல் இஸ்லாம் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சமீர் அஹ்மத்கான், முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம், கர்நாடக முன்னாள் வக்ஃபு வாரிய அமைச்சர் ஹிந்தா ஷேஹ்ரி, முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
திசை திருப்பும் முயற்சியா? கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு அந்தப் புகார்களின் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காக மதவாத பாஜக அரசு இதன் பின்னணியில் சதி செய்வதற்காக தனது அரசின் சிறுபான்மை நலத்துறையை ஏன் பயன்படுத்தி இருக்கக்கூடாது? முஸ்லிம்களையும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் களங்கப்படுத்தச் செய்யும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம் அல்லவா? என்ற வாதம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசியல்வாதிகளால் எழுப்பப்படுகிறது. அவர்களது வாதங்கள் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல, எனினும் வக்ஃபு சொத்துக்களில் கணிசமானவை நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவது மறுக்க முடியாத உண்மை அல்லவா?
இரண்டையுமே தெளிவுபடுத்த தேவை முறையான, விரைவான, நீதியான விசாரணை

பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்

பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்

E-mail Print PDF
இந்நாட்டு மக்கள் அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட போர் இந்தப் போரைத் தொடுத்தது சீனாவோ, பாகிஸ்தானோ வேறு எந்த பயங்கரவாத இயக்கங்களோ அல்ல. நம் வரியை வாங்கி நம்மை நிர்வாகம் செய்வதாகவும் நாங்கள் மக்கள்நல அரசாங்கத்தை (Welfare State) நடத்திவருவதாக தம்பட்டம் அடித்துவரும் நமது மத்திய அரசுதான் இந்த இரக்கமற்ற போரைத் தொடுத்துவிட்டது. ஏழைகள், உழைப்பாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு.
சர்வதேச ஏமாளிகளா மக்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மக்களாகிய நாம் சர்வதேச ஏமாளிகள் என்பதை சொல்லாமல் தம் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளது மக்கள்(!) நல மத்திய அரசு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.54 ரூபாய் அதிகரிக்கப்பட்டு மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொண்டுள்ளது மன்மோகன்சிங் அரசு. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ண யித்துக் கொள்ளலாம் என்ற மக்கள் விரோத, மூடத்தனமான முடிவின் மூலம் அரசாங்கம் தங்கள் குடிமக்களின் மீது தீராத வேதனையை ஏவிவிட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 106 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 90 டாலர்களாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்? ஆனால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் அல்லவா? டாலர் பொருளாதாரத்தினால் விளைந்த தீமை!
சர்வதேச எண்ணெய் சந்தையை டாலர் பொருளாதாரத்தினால் நிர்ணயித்ததால் மிகப் பெரிய தீங்கினை நாம் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. முன்னர் 49 பாய் மதிப்பிலான ஒரு டாலர் இப்போது 56 ரூபாய்க்கு மேலே எகிறியுள்ளது. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய்க்காக அதிக அளவு டாலரை செலுத்த வேண்டிய நிலையில் அதனால் ஏறும் விலை ஏற்றம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் விடிகிறது. ஒண்ணும் தெரியல... ஒரு இழவும் புரியல...
ஒண்ணும் தெரியல, ஒரு இழவும் புரியல... இவ்வாறு மனதிற்குள் பாடிக்கொண்டிருப்பவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழு துணைத் தலைவர் (எல்லாரும் திட்டுவதற்கென்றே போடப்பட்ட கமிஷன் போலும்) மாண்டெக்சிங் அலுவாலியா இந்த மூவரும்தான் இவ்வாறு புலம்பித் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
ஊரு உலகமெல்லாம் குறைந்த விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை நமக்கு மட்டும் ஏன் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது? டாலரின் மதிப்பு ஏன் திடீரென ஏறியது?
இந்திய அரசு ஏற்றுமதியை விட இறக்குமதியைத்தான் அதிகம் செய்கிறது. இந்த இறக்குமதிக்கான நாணயம் டாலரில்தான் மதிப்பிடப்படுகிறது.
இறக்குமதிக்காக இந்திய அரசு செய்யும் செலவில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசால் பெட்ரோல் டீசல் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியவில்லை. மாற்று எரிபொருளுக்கான புதிய முயற்சிகளுக்கும் வழியில்லை. ரூபாயின் சரிவைத் தடுக்க இறக்குமதியைக் குறைக்கவும் முடியவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கவும் வழியில்லை. இப்படி இல்லை என்ற சொல்லை மட்டுமே ஏகப்பட்ட ஸ்டாக் வைத்திருக்கும் மத்திய அரசைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
ஏற்கமுடியாத காரணங்கள் இந்தியா பெட்ரோல், டீசலை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால் விலையை மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் சர்வதேச பெட்ரோல் டீசல் விலைகளின் அடிப்படையில் செய்கிறோம். இதை எந்த அடிப்படையில் நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியும்?
மும்பையிலும், அஸ்ஸாமிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்காக போக்குவரத்துச் செலவு இல்லாமல் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் கொண்டுபோய் சேர்ப்பது எதற்காக? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான செலவுகளைக்கூட அந்தப் பண முதலைகளிடம் வசூலிக்காமல் இருக்கும் ஏமாளித்தனம் (அல்லது) கயமைத்தனம் மத்திய அரசுக்குத் தேவையா? சாதாரண சிறிய தொழில் முனைவோர் வரி ஏய்ப்பு செய்தால் பாய்ந்து பிராண்டும் அரசு இயந்திரங்கள், பண முதலைகளிடம் இறக்குமதி செய்யும் செலவுத் தொகையை வசூலிக்காமல் விட்டுக்கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
ஐந்து லட்சம் கோடி மானியம் பெறும் எண்ணெய் நிறுவனங்கள் இந்நாட்டின் ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களாலும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினாலும் மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதால் நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என நீட்டி முழக்கும் அரசியல்வாதிகளும், பன்னாட்டு அடிமைகளாக மாறியுள்ள சில ஊடகங்களும் ஒரு உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரி யாமலே மறைத்திருக்கிறார்கள். அதாவது நாட்டின் ஏழை மக்களை உறிஞ்சி அந்த ரத்தத்தையே எண்ணெயாக விற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொட்டி அழுதுவிட்டு, அதே எண்ணெய் நிறுவனங்களை விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும் என உரிமையும் வழங்கிவிட்டு ஆள்வோர் நாடகம் ஆடுவதை நாட்டு மக்கள் எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட போர், உக்கிரமமான போர் என்பதில் சந்தேகமே இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா? மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றும் முறையிலான கணக்கீட்டு முறையினால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கில் காட்டப் படுகின்றன. இது அப்பட்டமான பொய் என மத்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக நிரூபித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் உள்பட அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய் போன்றே இறக்குமதி வகையில் காட்டப்படும் ஏமாற்றுக் கணக்கு. மேலும் கப்பலில் கொண்டு வரும்போதும், கடலில் கசிந்த எண்ணெய் ஏற்றும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் கழிவு மற்றும் செலவு கணக்கு எல்லாவற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் கிடைக்கும் வண்ணம் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. அரசு அமைத்த குழுக்களே உண்மைகளை வெளியிட்ட பிறகும் அதனை வெளி யிட ஏன் இன்னும் தாமதம்? போட்டி போட்டு விலை உயர்த்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்தி வரி, மேல் சரி போன்றவை 32 சதவீதம் ஆகும். மாநில அரசின் விற்பனை வரி 27 சதவீதம் ஆகும். இவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு லாபம் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்ரோல் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிவருவது என்பதை கடந்த நிதியாண்டு வரி வருவாய் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரிகளை மத்திய அரசு பெருமளவு குறைத்துவிட்டால் மக்களை விலை உயர்வு என்ற துயரில் இருந்து மீட்க முடியும். பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முன்வரும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய் எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து வருடந்தோறும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பெட்ரோலும், 1 லட்சத்து 20 ஆயிரம் டீசலும் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான பெட்ரோல் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இதைப்போன்று இந்திய நாட்டிற்குள்ளே கிடைக்கும் கச்சா எண்ணெய் கூட இறக்குமதியான கணக்கில் காட்டும் கயமைத்தனத்தை என்னவென்பது? பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. ஏற்றப்பட்ட விலை உயர்வு உடனடியாக குறைக்கப்பட வேண்டும். மக்கள் மீது மென்மேலும் துன்பச்சுமைகளை ஏற்றும் எதேச்சதிகார அதிகார வர்க்கத்தை வாக்குச் சீட்டின் வழியாக கணக்குத் தீர்க்க காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

- சில உடனடி தீர்வுகள்
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவகைகளைக் குறைத்தால் விலை குறைக்க முடியும்.
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பணமுதலைகளுக்காகவும் அடிக்கடி வரிவிலக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கும் அரசுகள் மக்களுக்காக எப்போதாவது இந்த வரிச்சுமையைக் குறைத்து விலைகுறைக்க முன்வர வேண்டும்.
இதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்தபோது மத்திய அரசு விலையைக் குறைக்காதது ஏன்? அந்த லாபம் எல்லாம் எங்கே போனது?
நம்மை விட சின்னஞ்சிறு மாநிலமான கோவா முற்றிலுமாக வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயைக் குறைத்துள்ளது. இதனால் கோவா, விலை குறைவைப் பெற்று மகிழ்வதுடன் அதிகப்படியான 5.50 காசு குறைவினைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கோவாவைப் போல் தமிழக அரசும் வரியினைக் குறைத்து பெட்ரோல் கூடுதல் விலை உயர்வை சரிக்கட்ட முயற்சி எடுத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் தமிழக முதல்வரை வாழ்த்தும். பெட்ரோலுக்கான வரிவிதிப்பை குறைப்பதனால் ஏற்படும் இழப்பினை சரிக்கட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கான வரி விதிப்பினை அதிகரிக்கலாம்.

- மாற்று ஏற்பாடு எங்கே?
எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க என்னதான் பாரதூரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் வேகமாக வளரும் ஒரு நாடு மாற்று எரிபொருள் குறித்த திட்டங்களை ஏற்படுத்தாவிட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்களுக்கு எரிபொருளாக ‘எத்தனால்’ பயன்படுத்தினர். நம்நாட்டிலும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வாகனங்களின் என்ஜின்களுக்கு 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் கூட எத்தனால் 85 என்ற பெயரில் வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் 85 சதவீதம், எத்தனால் 15 சதவீதம் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வாகனங்களின் என்ஜின்களில் சிறு மாற்றங்களை செய்தால் போதும். இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவெனில் எத்தனால் எரிபொருளால் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- மக்கள் புரட்சியும் மந்தை ஆட்டு புத்தியும் தாங்க முடியாத விலை ஏற்றத்தில் சீற்றமடைந்த மக்களை திசைதிருப்ப செயற்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் பஞ்சத்தை ஏற்படுத்தி பெட்ரோல் பங்க்குகளை மொய்க்கும் வண்ணம் திசைமாற்றிவிட்ட அவலத்தை என்ன செய்வது?
விண்ணை மட்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சீற்றமடைந்த மக்கள் ஆள்வோரை எதிர்த்து போராடத்தானே முடியும். - இரட்டை வேடம் போடும் சில அரசியல் கட்சிகள்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறோம் என பெயரளவில் சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இவைகள் மத்தியில் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே வேடம் போடுகின்றன. விலையை பெயரளவிற்கு குறைத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- எத்தனால் புறக்கணிக்கப்பட்டது எதனால்?
இந்தியாவில் 560 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் 46 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத ஆலைகளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படாத காலங்களில் எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால் இந்தியா ஓரளவு நெருக்கடியில் இருந்து மீளலாம்.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் அம்பானிகளின் பெட்ரோலிய கொள்ளை லாபத்தை பாதிக்கும் என்பதால் மன்மோகன் அரசால் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டது. எத்தனால் எரிபொருள் எதனால் புறக்கணிப்பட்டது என்பது புரியும்தானே?