தேவை தேர்தல் சீர்திருத்தம்
இருவர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையில், போட்டியிட்ட வேட்பாளர்களிடையே வாக்காளர்களான சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் போட்டி மும்முரமாக நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காக ஒரு சுயேச்சை வேட்பாளரின் தம்பி தனது காரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாயைக் கொண்டு சென்றபோது காவல்துறையினர் மற்றும் வருமானவரித் துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் நடைபெறவிருந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. உறுதியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஷஃபி குரைஷி தெரிவித்திருக்கிறார். தேர்தலை ரத்து செய்த கையோடு குரைஷி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறிய வார்த்தைகள் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், ஊழலில் புரளும் கட்சிகளுக்கும், பணத்தைக் கொண்டு அரசுகளை வளைக்கலாம் என நினைக்கும் அதிகாரத் தரகர்களுக்கும் சாட்டையடி கொடுக்கும் விதத்தில் அமைந்தது.
பணபலத்தைக் காட்டி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இது சரியான பாடம் என குரைஷி தெரிவித்தார். மேலும் எங்களின் நடவடிக்கை இனிமேல் பணபலத்தை வைத்து தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகளுக்கு சரியான பாடமாக மட்டும் அமையாமல் அச்சத்தையும் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் குரைஷி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஜனநாயகத்தை வீழ்த்த பணநாயகம் செய்யும் முயற்சிகள் பலிக்கவில்லை என்றே சொல்லலாம். சில மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தேர்தல்களில் பணம் விளையாடி இருக்கலாமே தவிர நாடு முழுமையும் நேர்மையான முறையில் யாருக்கும் அஞ்சாத முறையில் தேர்தல்களை நடத்திக் காட்டியவர் குரைஷி. இத்தனை சாதனைகளை நிகழ்த்தி இருப்பினும் இனிமேல் இதுபோன்று நிகழாமல் இருக்க அரசியல் கட்சிகள்தான் ஒன்றுசேர்ந்து முடிவு எடுக்கவேண்டும் என்றும் அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.
இப்போதுதான் தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது மிகவும் அவசியம் ஆகிறது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தத்தை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் நடைமுறைக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று கூறிய குரைஷி, மேலும் பல தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றும், குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கவும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்கள் ஒளிவுமறைவு அற்ற நிலையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனக்கூறும் குரைஷி, தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டுமென சூளுரைத்துள்ளார்.
குரைஷி நிச்சயம் சாதிப்பார் என நம்புவோம். முறைகேடான தேர்தல் முறைகளைக் களைந்து தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு உத்வேகத்துடன் செயல்படும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இந்திய மக்கள் அனைவரும் தோள் கொடுப்பார்கள் என்பது உறுதி

No comments:
Post a Comment